தேர்தல் 2060 பற்றி சொல்ல வேண்டுமானால், நான் 54 ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நாம் கடந்து வந்த பாதைகளைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு மேல் பின்னோக்கியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
1952 ஆம் ஆண்டு நிலையுடன் அரசியல், பொருளாதார, சமூக மாற்றம், முன்னேற்றம் இவைகளுடன் அறிவியல் வளர்ச்சி சேர்ந்ததுதான் 2006.
அதேபோல,2006 ஆம் ஆண்டு நிலையுடன் அரசியல், பொருளாதார, சமூக மாற்றம், முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் உலக மயமாக்கலினால் ஏற்பட இருக்கும் பிற மாற்றங்கள் சேர்ந்தது தான் 2060.
என்பது தான் எனது சுருக்க குறியீடு!
இந்த குறியீட்டை அடிப்படையாக வைத்து கடந்த கால தேர்தல்கள் எந்த அளவு இந்த தேர்தலில் ஒத்துப்போகின்றன என்பதையும், எதிர்காலத்தில் எந்த அளவு மாறுபடும் என்பதையும் நாம் கணிக்க முடியும். எனக்கருதுகிறேன்.
1952 முதல் 2006 வரை தேர்தல் அரசியலை திரும்பிப் பார்ப்போம்.
அரிசியும் அரசியலும்1967ஆம் ஆண்டு தேர்தலில் ரூபாய்க்கு 3 படி அளிப்போம் என்றார் அண்ணா,எப்படி முடியும் என்று கேட்ட போது, 3 படி லட்சியம், 1 படி நிச்சயம் என்றார். சென்னையிலும், கோவையிலும் சிலகாலம் ஒருகிலோ ஒரு ரூபாய் என சிலகாலம் வழங்கப்பட்டது. ஆனால் தொடர முடியவில்லை.
ஆனால், 2006 தேர்தலில் 10 கிலோ, 15 கிலோ, இலவசம் எனவும், 2 ருபாய்க்கு ஒரு கிலோ எனவும் அரிசி அரசியல் நடைபெற்றது. இந்த அரசு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடர்ந்து தருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
திரைப்படமும் அரசியலும்தமிழகத்தில் திரைப்பட அரசியல் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 1952 பராசக்தி படத்தில் என். எஸ் .கிருஷ்ணன் தினா............. முனா.......... கானா.......... என்று தொடங்கும் பாடலில் தி.மு.க விற்கு ஆதரவாக பெரியார், அண்ணா, தி. மு. க பற்றி மறைமுகமாக பிரச்சாரம் செய்தார்.
திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிவந்த கருணாநிதி அண்ணா மறைவிற்கு பிறகு தி.மு.க இயக்கத்தை எதிரிகளிடமிருந்து தனது சாதுரியமான நாவன்மையால் பாதுகாத்தார். ஆனால், தி.மு.க எம்.ஜி.ஆர் தலைமையில் பிளவுபட்ட போது, தி.மு.க பின்னடைவை சந்தித்தது. எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களால் மக்களிடம் செல்வாக்கு படைத்த ஒருவராக திகழ்ந்தார். அவரது செல்வாக்கு இன்றுவரை அந்த கட்சிக்கு பலமாகவே உள்ளது.
அவருக்கு பின் அந்த கட்சியை அவருடன் படத்தில் நடித்து வந்த செயலலிதா கைப்பற்றினார் இன்று விசயகாந்த் சமீபத்தில் கட்சி தொடங்கி கணிசமான வாக்குகளை வாங்கி இருப்பதுடன் இந்த தேர்தலில் திரைப்பட நட்சத்திரங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
எனவே, திரைப்படமும் அரசியலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத் தேர்தலில் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.
சமூக பொருளாதார மாற்றங்கள்அன்றைய மக்கள் தகவல் தொடர்பு வசதியில் மிகவும் பின்தங்கியிருந்தனர் அதனால் உலக செய்திகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன.
ஆனால், இன்றோ அவ்வப்போது, நேரடியாக உலக விசயங்களை தொலைக்காட்சிகள், தகவல் தொடர்பு வசதிகள் மூலம் வழங்கி மிகப்பெரிய மாற்றத்தினை உருவாக்கியுள்ளது. இவை மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான அடிப்படைகளையும் நமக்கு வழங்கியிருக்கிறது.
தஞ்சைப்பகுதி காவிரி நீரையும் பிற பகுதிகள் அந்தந்த பகுதி நதிகளை நம்பி பயிர்செய்யும் நிலப்பரப்பாக இருந்ததால் பெருமளவு மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். காவிரி நீர் வராமையால் பலர் நகர்புறம் நோக்கி கட்டுமானத்தொழில் உள்பட பலதொழில் செய்ய நாடோடிகள் போல் ஆகியுள்ளனர்.
அறிவியல் வளர்ச்சிஅன்றைய தேர்தலில் வாக்கு சீட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன, முடிவு அறிவிக்க 3 நாட்கள்வரை ஆகும். ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சியினால், மின்னனுவியல் இயந்திரங்கள் பயன் படுத்தி சிலமணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.
பழைய காலங்களில் நேரடி தேர்தல் பிரச்சாரம் இருந்த்து. ஆனால், 1984 ஆம் ஆண்டு எம்.ஜிஆர் அமெரிக்க மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது அவர் மருத்துவமனையில் படிப்பது, உணவு அருந்துவது உள்ளிட்ட காட்சிகளை வீடியோ காட்சி காட்டப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த தேர்தலில் நேரடி ஒலிபரப்பாக பிரச்சார தளத்திலிருந்து உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டது. .இந்த பிரச்சாரம் அக்கட்சிக்கு வெற்றி தேடித்தந்த முக்கிய காரணங்களில் ஒன்று.
அத்துடன் கைத்தொலை பேசியில் குறுந்தகவல் மூலமும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தேர்தல் அரசியலின் சுருக்க வரலாறு.இந்த சுருக்கவரலாற்றை வைத்துக் கொண்டு தான் நாம் வருங்கால அரசியலின் போக்கை வரையறுக்க முடியும்.
இனி தேர்தல் 2060 எப்படி இருக்கும் என்று கணிப்போம்.
தேர்தல் 2060அரிசியும் அரசியலும் - தேர்தல் 206054 ஆண்டுகள் கழித்தும் அரிசி அரசியல் இருக்காது என்று நான் உறுதி சொல்வதற் கில்லை. ஏனெனில், அமெரிக்க நிறுவனம் ஒன்று தென்னிந்தியா இன்னும் 40 ஆண்டுகளில் பாலைவனமாகும் என்று ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கேற்றார் போல், நம் நிலத்தடி நீர் குறைந்து வருவதோடு அரசுகளின் அக்கரையின்மையும் நமக்கு தெரிகிறது, நிலம் குளம், குட்டை, வாய்க்கால், ஏரிகள் மூடப்பட்டு வீடுகளாக்கப் பட்டுள்ளன. விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன. காவிரி நீர் கானல் நீரோ! என்ற கேள்வி இன்னும் நிலை பெற்றுள்ளது. இடைக்கால தீர்ப்பு நிரந்தரத் தீர்ப்பானாலும், வருங்கால அரசுகள் தொடர்ந்து நீர் வழங்குமா? என்பது கேள்விக் குறிதான்.
எனவே, காவிரி நீர் கேள்விக்குறியதாகவே உள்ளதால் தேர்தல் 2060-இல் அரிசி அரசியல் இருப்பது தவிர்க்க முடியாமல் போகலாம்.
அரிசி இல்லை யென்றாலும் உணவு பற்றிய அரசியல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைக் காண முடிகிறது.
திரைப்படமும் அரசியலும் - தேர்தல் 2060தமிழக வரலாற்றில் திரைப்பட அரசியலின் பங்கு மிக அதிகம் தான். இவ்வளவு முன்னேறிய சமூக அமைப்பில் நடிகர் “விஜய்” ஐ ஏன் பிடிக்கும் என்று கேட்டபோது அவர் பாய்ந்து பாய்ந்து சண்டைபோடுகிறார். அதனால் அவரை பிடிக்கும் என்கிறான் ஒரு ரசிகன். அதன் பின்னால் கயிற்றை கட்டி இழுக்கும் தொழில் நுட்ப ஏமாற்று வேலை உள்ளதை புரிந்து கொள்ள மறுக்கும் இளைஞனைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும் என்கிறார் இயக்குனர் சீமான்.
இப்படிப்பட்ட அப்பாவிகள் 2060-இல் இருக்கமாட்டார்கள் என நான் உறுதி அளிக்க முடியாது. எனவே, திரைப்பட அரசியல் 2060 தேர்தலிலும் திரைப்பட ஆதிக்கமில்லாத அரசியல் அமையும் வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது.
அறிவியல் வளர்ச்சியும் தேர்தல் 2060 - ம்மிகவும் முன்னேறிய தொழில் நுட்பம் பயன் படுத்தப்படும். வாக்குச்சாவடிக்கு வராமலே வாக்களிக்கும் தேர்தல் முறை வரலாம். எங்கிருந்தாலும் அவர் வசிக்கும் பகுதி வேட்பாளருக்கு இணைய வழி வாக்களிப்பு முறை அல்லது அதைவிட முன்னேறிய வழிகளில் தேர்தல் நடைபெறலாம்.
இப்போதுள்ள வங்கி அட்டை (ஏ.டி.எம்) மாதிரி வாக்காளர் குறியீட்டு அட்டை வழங்கப்படலாம். கணிப்பொறித்திரை முன் வந்து நின்றால், கணிப்பொறி தானாக முகம் பார்த்து அங்கிகரித்து வாக்களிக்க அனுமதிக்கலாம். மனித உபயோகம் குறைக்கப்படலாம்.
அல்லது இணைய வழி தேர்தலோ, மின்னனு முறைத்தேர்தல், கைத் தொலைபேசி மூலம் வாக்களிக்கும் வசதியும் ஏற்படலாம். அல்லது இவைகள் எல்லாம் அடங்கிய பல்நோக்கு முறையில் கூட தேர்தல் நடத்தப்படலாம்.
2006 தேர்தலின் சிறப்புக் கூறுகளும் 2060 தேர்தலும்முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது தான் வழக்கம். ஆனால் இப்போது மத்தியிலும் மாநிலத்திலுமே கூட்டணி ஆட்சிகள் நடைபெறுகிறது.
கூட்டணிகட்சிகள் விலகினால் ஆட்சிகள் கவிழும் நிச்சயமற்ற நிலை இப்போது உள்ளது. பாராளுமன்றம் நிலையற்ற நிலையில் இருக்கும் அதே வேளையில் பாராளுமன்ற அமைப்பு முறை வலுப்பெற்று வருகிறது. மக்கள் வாக்களிக்கும் விகிதம் மாறுபட்டுள்ளது. பாராளுமன்ற அமைப்புமுறையில் நம்பிக்கை ஏற்படும் வகையில் விதிமுறைகள் அதிகமாகியுள்ளது.
இப்போது தேர்தல் நடைபெற்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சியாளர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை திருப்பி அழைக்கும் உரிமையை இப்போது சிலர் கோரிவருகின்றனர்.
அவ்வாறான உரிமை பிற்காலத்தில் வழங்கபட்டால் தேர்தல் 2060 ஆண்டு ஆட்சியில் நிச்சயமற்ற போக்கு மேலும் அதிகமாகும்.
அரசியலில் ஊழல் நேர்மையின்மை, நம்பிக்கை இழக்கச் செய்தாலும் அரசின் நிறுவனமய மாக்கலின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.தேர்தல் நடப்பதில் பணம் வழங்குதல், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றத்தடை போன்ற கட்டுப்பாடுகள் விதித்தல் என்பது நிறுவனமயமாக்கலின் தன்மையேயாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற சட்டமன்ற அமைப்புகளைவிட நீதித்துறை, தேர்தல் துறை போன்றவை தம்மை வலுவாக அமைத்துக் கொள்ளும் போக்கு வளர்ந்துள்ளது.
இதுபோன்ற நிறுவனமயமாக்கல் என்பது ஒரு ஆபத்தான போக்காகும். ஏனெனில் இந்திய இரையாண்மைத் தொடர்பான வழக்கொன்று நீதிமன்றத்தில் வருமானால் அந்த நீதிமன்ற தலைமை நிதிபதியை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இரையாண்மையை கேலிக்கூத்தாக்க முடியும்.
எனவே, அதிகாரக்குவிப்பின் வடிவமான நிறுவனமயமாக்கல் என்பது கைவிடப் படவேண்டும். ஆனால் தேர்தல் 2060 -இல் நிறுவனமயமாக்கல் அதிக்கப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது. இத்தகைய மாற்றம் உலகமயமாக்கல் சூழலில் இந்தியாவிற்கான பாதுகாப்பற்ற தன்மையை அதிகரிக்கும் என்றே சொல்லமுடியும்.
தேர்தல்பற்றிய விழிப்புணவுகள் இப்போது மாறிவருகின்றன. இதற்கு முன் எப்போது இல்லாத வகையில் தேர்தலைப் புறக்கணிப்பவர்கள் 49 ஓ சட்டப்பிரிவு பற்றிய விழிப்புனர்வு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் துறையானது இதுவரை தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதை சரிபடுத்துவது பற்றித்தான் அதிகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளை களைவதில் அக்கரை காட்டவில்லை.
நான்குக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைகள் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டால் தேர்தல் முடிவுகள் சனநாயகப்பூர்வமாக இருப்பதில்லை. எனது முந்தய பதிவு
தேர்தல்முறை ஜனநாயகம் இதில் தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் சனநாயகத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட பத்திரிக்கைகள். தொழில் முறை நிறுவனங்களாகியுள்ளன. தாம் விரும்பும் கட்சிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு அல்லது வேறுவகையான ஆதாயங்களை பெற்றுக் கொண்டு தனது சனநாயக்கடமைகளை ஆற்றும் பணியிலிருந்து தம்மை தவிர்த்துக்கொண்டன. இந்த நிலைமை 2060 ஆண்டு தேர்தலில் மிகவும் வலுவான நிலைமைகளில் காணப்படும் நிலையில் உள்ளது.
உலகமயமாக்கல் சூழலில் இந்தியாஉலகமயமாக்கல் பின்னணியில் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. நதிகள் தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. இப்போது விவசாயத்தில் சிரமப்படும் விவசாயிகள் மேலும் துன்பம் எதிர்கொள்ளலாம். இது தேர்தலில் எதிரொலிக்கும். சமூக மாற்றம் உலக அளவிலான கலாச்சார மாற்றம் இருக்கும். உலகில் எப்பகுதியும் உலகமய பின்னணியின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.
இப்போது அன்னிய மூலதனத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அவ்வாறு தொடங்கினால் அதற்கான இலாபம் முழுக்க வெளிநாடுகளுக்கே செல்லும், எனவே இந்தியவில் மூலதன பற்றாக்குறை ஏற்படும்.
2005-2006 ஆம் ஆண்டு மட்டும் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் ரூ; 2, 09 ,904 கோடி ( தினமணி 17-05-2006 ப. சிதம்பரம் அறிக்கை) ஆக உள்ளது.
இவ்வளவு பெரிய தொகை மேலும், கடன் வட்டி என மிகப்பெரிய கடன் தொகையாக மாறிப்போய் இருக்கும். இவ்வளவு கடன் வாங்கும் இந்திய அரசு அதனை அடைப்பதற்கான திட்டம் எதையும் வைத்திருப்பதாக தெரியவில்லை. அல்லது நீண்டகாலப் போக்கிலேனும் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
என்வே, இன்னும் பெரிய கடன்கார நாடாக இந்தியா மாற இருப்பதால், கடனை அடைக்க முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். பின்னர் சமாளிக்கலாம் என்று நீங்கள் சொன்னால், இப்போதே அப்படி சமாளிக்கலாம் இல்லையா?. இப்போது, உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆணையின் பேரில் தான் திட்டம் போடுகிறது இந்திய அரசு.
பிற்காலத்தில் அமெரிக்க கைப்பாவையான உலகவங்கி உத்தரவுப்படி இந்திய அரசு ஒரு காலணிய அரசாகவோ அல்லது இதைவிட முன்னேறிய அரைக்காலணிய அல்லது காலணிய நாடாக இந்தியா மாறி வரும் சூழல் வளர்ந்து வருகிறது.
இந்தியா முன்னர் இங்கிலாந்து காலணியானது, போல, இப்போது அமெரிக்க காலணி நாடாகும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அமெரிக்க போர் உளவியல் நமக்கு அளிக்கும் பாடம் இவை.
அப்படி நடந்தால், 2060 தேர்தலை இந்தியாவின் அமெரிக்க காலணி அரசு அல்லது அதன் கைப்பாவை அரசாக இந்திய அரசு தான் இங்கு தேர்தல் நடத்தும் என்றும் நாம் கருதலாம்.