இந்தியாவிற்கு ஒரே பிரதமர், ஒரே தேசியக் கொடி, ஒரே தேசியகீதம், ஆனால், எங்கள் தமிழ்ப்படத்தை 7 வாரம் கழித்துத் தான் கர்நாடகாவில் ரீலீஸ் செய்யமுடியும். ஆனால் கோக், பெப்சி கம்பெனிகள் தங்கள் சரக்குகளை அங்கே விற்று பணத்தை அள்ளிச் செல்ல முடியும். இதற்குப் பெயர் தான் தேசிய ஒருமைப்பாடு?.
திரைப்பட இயக்குனர் சீமான் (மே-10-06 இந்தியா டுடே தமிழ் பக்கம்- 5).
திரைப்பட இயக்குனர் தெரிவிக்கும் தகவல் என்ன?. மொழி வாரியான தேசிய இன எழுச்சி தலை தூக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரே நாட்டில் காவிரி நதி நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படாமல் இருப்பது ஏன்? ஆனால் இரண்டு வேறு பட்ட நாடுகள் இடையே கூட நதிநீர்ப் பிரச்சனைகள் எளிமையான முறையில் தீர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது.
கர்நாடகத்தில் காவிரியும், ஆந்திராவில் பாலாறும், கேரளாவில் பெரியாறு அணையும் தமிழர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரே இந்தியா என்ற உணர்வு இவர்களுக்கு இல்லையா? தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன்?. அதே போல காங்கிரசு, பா.ச.க ஆகிய கட்சிகள் அந்த மாநிலத்தில் ஒரு மாதிரியும் தமிழகத்தில் வேறு மாதிரியான நிலையையும் எடுக்கிறது.
தைரியமாக காவிரி நீரை விடவேண்டும் என்றோ, அல்லது விடவேண்டாம் என்றோ அந்த கட்சிகள் அறிவிக்க தயாரா?. அறிவிக்க மாட்டார்கள்.
அதாவது மொழி அடிப்படியிலான, இன அடிப்படையிலான உளவியல் மாற்றம் எல்லா மாநில அரசுகளிடமும், மக்களிடமும் காணப்படுவது உண்மை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.
“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்றொரு பேரரசு இருந்ததில்லை. எனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.
இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனம தன் அடையாளத்தை இழக்கிறது. அது அழிந்து போகிறது என்று பொருள்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமக்கிருதம் யாருமே பேசாத மொழியாக உள்ளது. ஆனால் தமிழ் உலகம் முழுதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது. ஆனால் அந்த மொழிக்கு சமக்கிருததிற்கு இணையான தகுதி வழங்கப்படவில்லை. எனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.
திராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் 56 நவம்பரிலிருந்து கவனித்தால் அவர் எந்த இடத்திலும் அவர் திராவிடத் தேசியத்தை வலியுறுத்த வில்லை என்பது விளங்கும். 56 க்குப்பின் இந்திய வரைபடத்தை எரிக்கப்போகிறேன் என்று பெரியார் சொன்னபோது தமிழ்நாடு நீங்கலாக என்று சொன்னாரே தவிர திராவிடநாடு தவிர என்று சொல்லவில்லை.
இப்படி சிறிய தேசிய இனங்களாக இருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளால் வல்லரசு ஆத்திக்கம் இருக்கும் என்கிறார்கள் சிலர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடாக இருக்கிற இந்தியா மீது அமெரிக்க ஆதிக்கம் இல்லையா?. இன்று உலகத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளும் ரஷ்யா உள்பட அமெரிக்காவைப் பார்த்து அஞ்சுகின்றன.
அமெரிக்காவைப் பார்த்து அஞ்சாமல் இருக்கிற சின்னஞ்சிறிய நாடு கியூபா என்பதை மறந்து விடவேண்டாம்.
பாரதீய சனதாகட்சியின் அத்வானி சிந்தி இனத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர். எனவே பாகிஸ்தானின் சிந்தி இன உரிமைப் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தருகிறார். காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.
பாகிஸ்தானில் வங்க மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்தது. எனவே இந்தியாவில் தேசிய இனங்கள் விடுதலை அடையக்கூடாது. அன்னிய நாடுகளில் விடுதலை அடையாலாம் என்பது இந்திய அரசின் கொள்கை மட்டுமல்ல பல கட்சிகளின் நிலையாகவும் உள்ளது.
தேசிய இனம் தொடர்பாக பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளரான சந்திப்பு அவர்கள் இனவாத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார்.
//இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்!//
என்று அவர் தன் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ஆதரிக்கும் கட்சி தேசிய இனம் தொடர்பாக என்ன சொல்கிறது என்பதை கீழேக் காண்போம்.
இந்திய பொதுவுடைமைக் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்த போது கீழ்ககண்டவாறு முடிவெடுத்தது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பலதேசிய இனங்கள் அடங்கிய பெருநாடே இந்தியா என்பதை ஏற்றுக்கொண்ட அத்தீர்மானம் மேலும் அது பற்றி பின்வறுமாறு விளக்கமளித்துள்ளது.
“இத்தீர்மானத்தின் 3(ஏ) பகுதியில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டு பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுமொழி, பொதுவான பண்பாடு, பொதுவான மனவியல் பண்பாடுகள், பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியனவற்றைக் கொண்ட ஒவ்வொரு மொழிவழி மக்களும் தனித்தேசிய இனமாகக் கொண்டக் கருதப்பட வேண்டும்.
விடுதலை பெற்ற இந்தியாவில் சுயாதிக்க அரசாக (Autonomous state) விளங்ககூடிய உரிமையும் விரும்பினால் அந்தத் தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லக்கூடிய உரிமையும் இருக்க வேண்டும். ........................ .இவ்வாறு பிரிந்து அமைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களின் சுயாதிக்க அரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் ”.
இந்தத் தீர்மானத்தின் ஐந்தாம் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஆனால் இந்த விதத்தில் பிரிந்து போகும் உரிமையை அங்கிகாரிப்பதன் மூலம் உண்மையில் மாநிலங்கள் பிரிந்து விடும் என்று கருதத் தேவையில்லை. தேசிய இனங்களுக் கிடையிலான பரஸ்பர சந்தேகங்களைப் போக்குவதன் மூலமும், செயற்பாட்டை ஒருமையைக் கொண்டு வருவதன் மூலமும் சுதந்திர இந்தியாவில் மகத்தான ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இத்தகைய தேசிய ஒற்றுமையே எல்ல தேசிய இனங்களுக்கும் ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தேவையை அவற்றுக்கு உணர்த்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கும். அத்தகைய சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இன அரசும் சுதந்திரமாகவும், சம மதிப்புக்கொண்ட உறுப்பாகவும் பிரிந்து செல்லும் உரிமை கொண்டதாகவும் இருக்கும். நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி இதுவாகும்.”
பொதுவுடைமைக் கட்சியின் இத்தீர்மானம் மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் தேசிய இனங்களின் தன்னுரிமையை வலியுறுத்துகிறது.
இந்தியா ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் தன்னுரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா திகழ்வதன் மூலமே உண்மையான ஒற்றுமை நிலவும் என்பதையும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
1946ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் சார்பில் வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் தனது கருத்துக்களை பொதுவுடைமைக்கட்சி சமர்ப்பித்திருந்தது. அப்போதைய பொதுச்செயலாராக இருந்த பி.சி.ஜோஷி இக்குழுவிற்கு அளித்த அறிக்கையில் “தேசிய இனங்களுக்குத் தங்கு தடையற்ற சுயநிர்ணய உரிமை” (Unfiltered Self-determination) வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.
1947ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுத்தீர்மானதில் பின்வறுமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
“தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் வாயிலாக காங்கிரசு கட்சி அதே குற்றத்தை இன்று செய்து வருகிறது. மேலாண்மை செலுத்துகிற முதலாளிவர்க்கத்தின் நலன் கருதி காங்கிரசு இவ்வாறு செய்கிறது. காங்கிரசின் இந்தப்போக்கு தேசிய இனங்களுக்கிடையே பகை உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும். எனவே இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைமை தந்தால் ஒழிய இந்த அபாயத்தைப் போக்க இயலாது”. என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே பொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்
ஐ.நா சபை கூட உலகெங்கும் உள்ள தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை உண்டு என்பதை அங்கிகரித்துள்ளது. அதைதான் நாம் வலியுறுத்துகிறோம்.
தன்னுரிமை (Ritht to self detiermination.) ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை ஆகும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.
*************
உதவிய நூல்கள்:
1. தன்னுரிமையா? மாநில சுயாச்சியா?- (தமிழர் தேசிய இயக்கம்).
2.பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்- (தமிழர் தேசிய இயக்கம்.)
3. அன்னம் சிற்றேடு ஏடு 7, 1994
4. தமிழ் உரிமை மிட்போம், (தமிழ் உரிமைக்கூட்டமைப்பு திண்டிவனம்.)
5. தன்னுரிமைத் தமிழ்தேச எழுச்சி முரசு – (மார்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி)