Thursday, October 16, 2008

புதுதில்லி அனுபவம் : உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல!

புதுதில்லியில் ஒரு புதிய அனுபவம், புதுதில்லியில் புதுச்சேரி விருந்தினர் இல்லத்திலிருந்து காலை எட்டு மணியளவில் தானியங்கி  (AUTO)  வருகைக்காக நானும் எங்கள் அலுவலக நண்பர் வெங்கடேசும் சாலையோரம் நின்றிருந்தோம். அப்பொழுது  ஒரு முதியவர் தானியங்கியுடன் எங்கள் முன் வந்தார்.
"புதுதில்லி இந்தியா கேட்"


நாங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு ரூபாய் என்று கேட்ட போது மீட்டர் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி பயணத்தை தொடர்ந்தார். அவரை பார்த்த போது  கசங்கிய, கிழிந்த உடை அணிந்திருந்ததை பார்த்தோம். அவரை விசாரித்தபோது அவர் பெயர் பிரித்தம் சிங் என்பதும் அவருக்கு வயது 71 என்பதையும் தெரிவித்தார். அவர் இருக்கைக்கு அருகில் ஒரு கைத்தடியும் இருந்தது. இந்த கைத்தடியோடு தான் அவர் எங்கும் பயணிக்கிறார்.

 இவர் இந்திய விடுதலைக்கு முன் பாகிஸ்தானில் பிறந்து, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதே புதுதில்லியில் குடிஅமர்ந்தவர் என தெரிவித்தார். தலையில் உள்ள தலைப்பாகையை பார்க்கும் போதும் பேசியதிலிருந்தும் அவர் சீக்கியர் என அறிந்து கொண்டோம். சீக்கியர் இப்படித்தான்  இந்த வயதிலும் கடுமையான உழைப்பவர்களாக இருக்கிறார்கள் என நண்பர் வெங்கடேஷ் சொன்னார்.


வெங்கடேசுடன் முதியவர் பிரித்திம் சிங்

இந்த முதிய வயதிலும் இந்த வேலை செய்கிறீர்களே என்று கேட்டபோது ஆம், "உழைத்தால் தான் வாழ முடியும், சாகிறவரை உழைப்பேன்" என சாதாரணமாக குறிப்பிட்டார். அவர் குடும்பத்தில் அவர் மகன்கள் இருந்த போதும் இவர் தன் மனைவியுடன் தனியாக வசித்துவருகிறார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவர் மீது அக்கரை செலுத்தவில்லை என்பது  அவரிடம் நடத்திய உரையாடலிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். தில்லி அரசு முதியவருக்காக வழங்கப்படும் ஓய்வூதியமாக ரூபாய் 1000/- பெறுவதாகவும் அது அவருக்கு போதுமானதாக இல்லை என்று  குறிப்பிட்டார்.

காலை 8 மணியிலிருந்து எட்டுமணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்திற்கு மீட்டர்  போட்டு மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறார். வழக்கமாக ரூபாய் 70/-, 80/- கொடுத்து பயணம் செய்த எங்களுக்கு அவர் வண்டியில் வந்த போது எங்களுக்கு 42/- ரூபாய் மட்டுமே வந்தது, அந்த தொகையை மட்டுமே அந்த பெரியவர் கேட்டார், இருப்பினும் நண்பர் வெங்கடேசு அவரின் கதையை கேட்டு 50/- கொடுத்து சில்லரை வேண்டாம் என தெரிவித்தார், நானும் 50/- ரூபாய் கூடுதலாக கொடுத்தேன், சிறிய தயக்கத்தோடு தான் கூடுதல் பணத்தை வாங்கிக்கொண்டார்.



முதியவருடன் நான்

இவரின் முதுமை, அவரது செயல் எங்களை அதிகம் சிந்திக்க வைத்தது.
உழைத்து வாழ வயது ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்தினாலும் இளைய சமூகம் முதியவர்கள் மீது அக்கரை செலுத்த வேண்டும்
என்பதை மற்றவர்களுக்கு வலியுறுத்தவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டோம்.

அவருடைய நேர்மையான அணுகுமுறையும், தளராத எண்ணங்களும் எங்களை மிகவும் நெகிழ செய்தது.