Saturday, November 22, 2008

ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா:திருமாவளவன் ஜெயலிதாவுக்கு பகிரங்க கடிதம்!

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக திருமாவளவன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்கட்கு எழுதிய பகிரங்க கடிதம். அவர் எழுதியுள்ள கடிதத்தினை தமிழகத்திலிருந்து வரும் குமுதம் வார இதழ் வெளியிட்டுள்ள கடிதம் பின் வருமாறு:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல்.


மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான்.

எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்தான்! தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பாதுகாப்புக் கோரும்போது, நீங்கள் மட்டும் உங்களுக்குப் பாதுகாப்பு கேட்டுக் குரல் எழுப்புகிறீர்கள். எல்லோருமே இந்திய அரசையும் சிங்கள அரசையும் எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. அரசை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துகிறீர்கள்! இருபத்தைந்து ஆண்டுகளாக மின்சாரமே இல்லாமல் இருட்டில் உழலும் ஈழத்தமிழர்களுக்காக, இங்கே எல்லோரும் வெளிச்சம் கேட்டு வெகுண்டெழும்போது, நீங்கள் மட்டும், இங்கே நிலவும் சில மணி நேர மின்வெட்டுக்காக கொதித்து எழுகிறீர்கள்! அரசியல் முரண்பாடுகளையெல்லாம் மறந்து, இனமான உணர்வுடன் இணைந்து மற்ற தலைவர்களெல்லாம் மழையிலே நனைந்து மனிதச் சங்கிலியாய் கைகோர்த்து நிற்கும்போது, நீங்கள் மட்டும் தேர்தல் கூட்டணிக்காக யாரோடு கைகோர்க்கலாமென்று துடியாய்த் துடிக்கிறீர்கள்!

புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஈழத்தமிழினத்தையே அழித்தொழிக்கும் இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணியை உடைக்க, ஒட்டுமொத்த தலைவர்களும் ஒன்றுபட்டு முயற்சிக்கும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. கூட்டணியை உடைக்கவே படாதபாடு படுகிறீர்கள். சிங்கள இனவெறியர்களால் பட்டினி கிடந்து சாகும் ஈழத்தமிழர்களுக்காக, இங்குள்ள தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் தம்மால் இயன்ற நிதியைத் தாயுள்ளத்தோடு அள்ளிக் கொடுக்கும்போது, நீங்கள் மட்டும் இரக்கமே இல்லாமல் இறுக்கமாயிருக்கிறீர்கள்! கடுமையான விமர்சனங்களால் கூட்டணி உறவே முறிந்துபோன நிலையிலும், பா.ம.க.வும், இந்திய அரசோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணியிலிருந்து வெளியேறிய இடதுசாரிகளும்கூட, ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தில், முதல்வரின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை அழுத்தமாக வைத்து வலுவாகக் குரலெழுப்பினர். ஆனால், நீங்களோ அந்தக் கூட்டத்திற்கு உங்கள் கட்சியிலிருந்து யாரையுமே அனுப்பாமல் புறக்கணித்துவிட்டீர்கள்.

ஒரு பீகாரியை மும்பையிலே கொன்று விட்டார்கள் என்பதற்காக, பீகார் மாநில கட்சித் தலைவர்கள் அனைவருமே எதிர் எதிர் துருவங்களிலிருந்த நிலைமாறி, ஒன்றுபட்டு நிற்கும்போது, நீங்கள் மட்டும் ஈழத்தமிழினத்தையே அழிக்கும் இனப்படுகொலையைக் கண்டும்கூட, தி.மு.க.வுடனான முரண்பாட்டையே முன்னிறுத்தி, தமிழின ஒற்றுமையைச் சிதைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்! விடுதலைப்புலிகளால் தங்களின் உயிருக்கு ஆபத்து என்று அடிக்கடி சொல்லுகிறீர்கள்! `கருப்புப் பூனை' பாதுகாப்புக்காகவே விடுதலைப் புலிகளை எதிர்க்கிறீர்கள்!

இருந்தாலும், விடுதலைப்புலிகளைச் சாக்குவைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறீர்கள். விடுதலைப்புலிகளை தி.மு.க. ஆதரிப்பதாகப் பழி சுமத்தி, காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் சிக்கலுண்டாக்கப் பார்க்கிறீர்கள்! `திருமாவளவனைக் கைது செய்' என்று வற்புறுத்தி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடைவெளி உண்டாக்கவும் பார்க்கிறீர்கள்! ஈழத் தமிழன் பூண்டோடு அழிந்தாலும், சிங்களவனை எதிர்ப்பதைக் காட்டிலும் தி.மு.க.வை எதிர்ப்பதுதான் உங்கள் அரசியல் என்பதை நிலைநாட்டி வருகிறீர்கள்! விடுதலைப் புலிகளை எம்.ஜி.ஆர். ஆதரித்தார்! பொருளுதவிகளைச் செய்தார்!

நீங்களும் ஆதரித்தீர்கள்! இது நாடறிந்த உண்மை! ஆனால், உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! அன்றைய நாளிலிருந்து இன்றைய நாள்வரை எப்போதாவது தி.மு.க. விடுதலைப் புலி களை ஆதரித்ததுண்டா? தொடக்கத்திலிருந்து `டெலோ' இயக்கத்தையும், பெரியவர் அமிர்தலிங்கம் போன்றவர்களையும் தானே தி.மு.க. ஆதரித்து வந்தது! அன்றும் இன்றும் தி.மு.க. விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சிக்கிறது என்பதுதானே உண்மை! ஆனாலும் விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதையே இப்போதும் செய்யவேண்டுமென்பதுதானே உங்கள் ஆசை!

உங்கள் ஆசை நிறைவேற, ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா? தமிழர்களின் தயவால், தலைவராக வலம் வரும் நீங்கள், தமிழர்களின் வாக்குகளால் ஆட்சியதிகாரத்தைச் சுவைத்த நீங்கள், தமிழர்களைக்கொண்டே மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் நீங்கள், அதே தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, இளிச்சவாயர்களாக்கி, தமிழினத்துக்கெதிராகவே செயல்படும் போக்கு நியாயம்தானா? இது தமிழினத்துக்கு எதிரான துரோகமென்று ஒரு நொடிப் பொழுதாவது உங்கள் நெஞ்சு உறுத்தவில்லையா? திடீரென்றா புலிகள் ஆயுதமெடுத்தார்கள்! காலம் காலமாய் சிங்களவன் செய்துவரும் கொடுமைகளுக்கு ஒரு வரம்பு உண்டா? உலகமே அறிந்திருக்கும் இந்தக் கொடூரம் உங்களுக்குத் தெரியாதா? எந்த அடிப்படையில் சிங்களவனை ஆதரிக்கும் வகையில் உங்களால் செயல்பட முடிகிறது? `செஞ்சோலை' என்னும் பள்ளியில் குண்டு போட்டு சின்னஞ்சிறு பிஞ்சுகளைக் கொன்றழித்த கொடுமையைக் கண்ட பிறகுமா, நீங்கள் சிங்களவனின் போக்கை ஆதரிக்கிறீர்கள்?

இங்கே தலைவர்கள் எல்லாம் தாயுள்ளத்தோடு பதறும்போது, நீங்கள் மட்டும் எப்படி இப்படி?

நீங்கள் இதிலும் மாறுபட்டவர்தான்! ஆனால், மாறாதவர்!

தோழமை கலந்த வேதனையுடன்...


நன்றி - குமுதம் வார இதழ்

நன்றி தமிழ் செய்தி

6 comments:

Anonymous said...

நாட்டை நாசம் செய்வதில் திருமாவலவனார் நெம்பர் ஒன்னல்லவா !

Anonymous said...

This is very good letter to Jeya...Mr.Thirumavalavan you are a one of the smartest politician in Tamilnadu now...Thanks Thiruma...

Anonymous said...

அப்பனுக்கே பேர் வைத்த இந்த சுப்பனை முதலில் உள்ளூர் தமிழனை பற்றி கவலை பட சொல்லுங்கள் சுகுமாரன் சார். வாங்கிய பெட்டிகளை சினிமாவில் முதலிடு செய்து கொள்ள சொல்லுங்கள். முக்கியமாக தனது சொந்த கம்பெனியை (VCK) உடையாமல் பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்.

Anonymous said...

Excellent letter. But Jaya never going to change her attitude.

Good citizen said...

அரசியல் காமெடியன் சுப்பிரமணிசாம்யின் நேரடி வாரிசு லோல். திருமாவளவனுக்கு செல்வி ஜெயலலிதாவை குற்றம் சொல்ல எந்த அருகதையும் இல்லை. நம் நாட்டின் பிரதமரையே கொன்ற விடுதலை புலிகள் செயலை அவர்கள் தலைவரே துன்பவியல் செயல் என்று ஒத்துக்கொண்ட ஒன்றை சி ஐ எ என்று சொல்லி மக்களை மடையர்கலாகியவர்
கை மாறிய பெட்டிகளை சினிமாவில் முதலிடு செய்து சுகவாழ்க்கை வாழும் ஒரு இனபிரவிக்கு மற்றவரை குறை சொல்ல எந்த உரிமையும் இல்லை.அதற்காக ஜெயலலிதா செய்வது ஞாயம் என்று நான் சொல்ல வரவில்லை ஜெயலலிதாவின் நோக்கம் பதவி தமிழ் பற்று அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

Anonymous said...

It is funny for you to criticise Jaya when you are aligning with Congress which is bent upon taking the revenge by killing the innocent Srilankan tamils. There should be a limit for opportunism. But Thiruma you have crossed those limits. If you want to earn money, there are umpteen ways are there. Dont follow this cheap tactic. Tamil people wont forget you. By the way, i am not a supporter of Jaya but the opposer of opportunistic alliance of DMK, Cong and you. God save India.