Wednesday, June 21, 2006

அனைத்துக்கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், உண்மை நிலையை கண்டறியவும் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கூட்டமைப்பின் செயலர் கோ. சுகுமாரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதிப்பேச்சு வார்த்தையை சீர்குலைத்து ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரைத் தொடங்கி தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் எம்.பிக்களை அழைத்து இலங்கை நிலவரம் குறித்துப்பேச வேண்டும்.

உலகத்தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்துள்ளது. 'தமிழர்கள் மீது போர்தொடுத்தால் ராணுவத் தளவாடங்களை திரும்பப்பெருவோம்' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். எனவே இந்திய தளவாடங்களை திரும்பப் பெறவேண்டும்.

அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். தமிழக அரசு அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கிவருகிறது அதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக அரசு மெளனமாக இருந்த வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

ஈழத்தமிழர்களை பாதுகாக்க இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். எனபன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

இப்பேட்டியின் போது, ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. அழகிரி, தந்தைப்பெரியார் தி.க புதுவை தலைவர் திரு. லோகு. ஐயப்பன், இராட்டிரிய சனதா தளம் தலைவர் திரு. சஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3 comments:

Anonymous said...

புதுவை மக்களுக்கும் அதன் முன்னோடிகளுக்கும் நன்றி!

hosuronline.com said...

வேதனையிலும் வேதனை என்னவென்றால் இந்தியா இலங்கை அர்சிற்கு தமிழர்களுக்கு எதிறாக பயன்படுத்த ஆயுதங்களை கொடுப்பதுதான். நீங்களும் நானும் இந்த ஆயுதங்களுக்காக அரசிற்கு வரி கட்டியுள்ளோம். கருநாநிதி என்ன செய்கிறார்?

சந்திப்பு said...

சுகுமாறன் நல்ல ஆலோசனையை வழங்கியுள்ளனர் புதுச்சேரி மக்கள் கூட்டமைப்பினர். வாழ்த்துக்கள். இந்திய அரசு இதனை விரைந்து செய்திட வேண்டும். அதேபோல் இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி.க்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்ற முடிவும் சரியானது. வாழ்த்துக்கள்..