Sunday, March 15, 2009

புதுச்சேரியில் நாளை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டம் டாக்டர் ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் த.பாண்டியன் நெடுமாறன் பங்கேற்பு

புதுவையில் நாளை (16-03-2009) இலங்கை தமிழர் பாது காப்பு இயக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உலக நாடுகள் இலங்கையில் நடைபெறும் இனவெறி போரை நிறுத்த தலையிடவேண்டும் என்று இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் முன்னின்று தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள்திரள் பேரணி என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

டாக்டர் ராமதாஸ்-வைகோ

இதன் தொடர்ச்சியாக புதுவையில் நாளை (திங்கட் கிழமை) மாலை 5-மணிக்கு பெரியார் திடல் சிங்காரவேலர் சிலையருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர்கள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க.வின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, மா.நடராசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் அழிந்துவரும் நமது தமிழினத்தை காப்பாற்ற உரிமை குரல் எழுப்ப உள்ளார்கள்.

மேலும் புதுச்சேரியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் அனைவரும் சாதி, மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து தமிழினமாய், தமிழினம் காக்கும் பொதுக்கூட்டத்திற்கு திரண்டு வந்து பொதுக்கூட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் பாவாணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: